
இலங்கையின் தேசிய விலங்கு பட்டியலிலிருந்து மரஅணிலை நீக்குவதற்கு தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மர அணில் பாதிப்பால் தென்னை, கொக்கோ தோட்டங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பயிர்வளம் அழிவடைகின்றது.
பயிர்களை சேதப்படுத்தும் விலங்கினங்களில் அணில் முதன்மையான இடத்தில் உள்ளது.
அதனால் அவற்றை தேசிய விலங்காக நியமித்தமை பொருத்தமானது அல்ல என பல விவசாய அமைப்புகள் ஆலோசனை சமர்ப்பித்துள்ளன என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழிந்துவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பொருத்தமான மற்றுமொரு விலங்கை தேசிய விலங்காகப் பரிந்துரைக்குமாறு விவசாய அமைப்புகள் கோரியுள்ளன.
இந்த நிலையில் விவசாயம் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளடங்கிய குழுவொன்று இதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ளது.
குழு மற்றும் பொதுமக்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.