மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநகரசபையால் ஆணையாளருக்கு வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட அதிகாரங்களில் மாநகர ஆணையாளர் தலையீடு செய்வதை தடுக்கக்கோரி மாநகர முதல்வரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபையின் ஆணையாளர் மா.தயாபரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பாக மேலதிகமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முதல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் எதிர்வரும் டிசம்பர் 06ஆம் திகதி வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.