கோட்டாவிற்கு 8 அடுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்! ஜனாதிபதியிடம் பஸில் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கான வசதிகளையும், அவருக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினையும் வழங்குமாறும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் 18 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் முன்னாள் அமைச்சர்களான ரோஹித அபேகுவர்தன, ஜோன்ஷ்டன் பெர்னான்டோ, பவித்ரா வன்னியராட்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கும், நாட்டில் அவரது பாதுகாப்பிற்கு எட்டடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை மிக முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.

பாராளுமன்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலமுடையதாக இருப்பினும், பல்வேறு காரணிகளுக்காக விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம் என தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்,

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு முன்வைத்துள்ள யோசனைக்கு அவதானம் செலுத்துமாறும் அவர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னெடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். பொதுஜன பெரமுன நாட்டின் நலனை கருத்திற்கொண்டு விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறது என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *