ஒரே நாட்டுக்குள் தீர்வு வேண்டும் எனநாம் கேட்கின்றோம் எம்மைப் புறக்கணித்தால் நாம் வேறு எங்கு செல்வது?
எனவே, ஜனாதிபதியிடம் நாம் எதனையும் எதிர்பார்க்க வில்லை. அவர் என்ன செய்வார் என்பது எமக்கும் தெரியும்.
ஜனநாயகத்தை பாதுகாக்க மாட்டார் என்பதும் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மாட்டார் என்பதெல்லாம் எமக்குத் தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று ஒருபுறம் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தமது விவசாயத்தை ஏதேனும் ஒரு விதத்தில் முன்னெடுக்க முடியும். ஆனால், மக்களுக்கோ பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது.
அடுத்த ஆண்டுக்குள் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நட்டஈடு கொடுத்துவிட்டு மக்களுக்கு ஏற்படும் உணவுத்தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு தீர்வுகொடுப்பது?
மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் ஏற்படும் நிலை என்ன என்பது சகலருக்கும் தெரியும்.
அடுத்த ஒரு வாரத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். இதனை எவரும் மறுக்க முடியாது.
இந்த நெருக்கடியில் கறுப்பு சந்தையின் தேவை அதிகரிக்கும். மக்களும் கறுப்புச் சந்தையை நாடும் நிலைமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.






