2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளார்.
உரையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,
அரச திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள நட்டம் ரூ. 500 பில்லியனுக்கும் அதிகம். கொரோனாவால் மீண்டும் நாங்கள் வழமைக்கு திரும்புவது பாரிய சவால். சவால்களை முகங்கொடுக்கக் கூடிய சக்தி எங்களிடம் இருக்கிறது.
சுயாதீன நீதித்துறை மற்றும் ஒழுக்கத்தை பேணக்கூடிய அரசாங்கம் இன்று இருக்கிறது. அதனால் நாம் பெருமையடைகிறோம்.
பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை கொண்ட ஒரே நாடு இலங்கையாகும். ஊழல் அற்ற ஜனாதிபதி, பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம், சிரேஸ்ட அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ச, சுயாதீன நீதிமன்றம் மற்றும் சிறந்த உட்கட்டமைப்புகள், அணிசேரா கொள்கை கொண்ட நாடு இலங்கை.
தொற்றுநோய் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை, பாதுகாப்புத் துறையினருக்கு மேலதிகமாக நமது வர்த்தகத்துறையினர் அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் ஒத்துழைத்தார்கள்.
சர்வதேச போதைப்பொருள் மாபியாவுக்கு இலங்கையை உள்ளீர்த்துக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அபாயமானதாகும். சர்வதேச போதைபொருளுக்கு அடிமையாவதிலிருந்து மீட்பதற்கு ஜனாதிபதி, பொலிஸ், இராணுவம் என்பன பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்தது.
உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை இலங்கையும் எதிர்கொள்கின்றது. உணவு தட்டுப்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை இலங்கையும் எதிர்நோக்குகின்றது. உள்நாட்டில் இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும், இந்த நாட்டில் அடிப்படைவாதம், பயங்கரவாததிற்கு இனியும் இடமில்லை.
சுற்றுலாத்துறையின் ஊடாக நாட்டிற்கு கிடைத்த 5 பில்லியன் டொலர் கடந்த இரு வருடங்களாக கிடைக்கவில்லை.
புலம்பெயர் தொழிலாளர்களினால் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இல்லாது போயுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற போது, நாட்டின் கடன் தொகை 13032 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. நாட்டில் வருமானத்தில் அதிகளவிலான செலவீனம், கடனை செலுத்துவது மற்றும் வட்டியை செலுத்துவதாகும்.
வியாபார மாபியா மற்றும் சர்வதேச அழுத்தங்களை ஏற்படுத்தும் தரகர்கள் சமூகத்தில் கலந்துள்ளனர். இது குறித்து சகலரும் அவதானமாக இருக்க வேண்டும்.
வாழ்வாதார விலைவாசி அதிகரிப்பு சவால்கள், நிலையான தீர்வை பெற்றுகொடுக்க எந்த அரசாங்கத்திற்கும் முடியாமல் போனமையே உண்மையாகும்.
உற்பத்திப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமையும், நாட்டில் பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரத்தின் பக்கம் கொண்டுசெல்லும் வேலைத்திட்டம் அவசியமாகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட 6.9 பில்லியன் டொலர் கடனை எங்களுடைய அரசாங்கம் செலுத்த வேண்டி வந்தது.
வரவு செலவுத்திட்டத்தில் அதிக செலவீனம், கடன்களை செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிறது.
சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், துறைமுக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
2022 வரவு- செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு என்ற தேசிய கொள்கையை முழுமையாக கவனத்தில் கொண்டோம்.
2018 ஏப்ரல் 2019 ஜூலை மாதம் வரையில் 15 மாதங்களில் 6.9 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டிய பாரிய சுமை எமக்கு சுமத்தப்பட்டுள்ளது.
இதுவரை காப்புறுதி குறித்து அவதானம் செலுத்தப்படாத பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் புதிய காப்புறுதி திட்டங்களை ஸ்ரீலங்கா இன்{ரன்ஸ் நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளின் ஊடாக வைப்பாளர்கள் எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படும் மோசடி குறித்து விசாரணை நடத்தி, அதனால் நட்டம் ஏற்படும் பட்சத்தில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூர்த்தி திட்டத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கிராம அபிவிருத்தி வர்த்தக திட்டமாக மாற்றப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு தற்போது 5 வருடங்கள் கட்டாயமாக்கப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது கட்டாயம் என்ற சட்டத்தை 10 வருடங்களாக அதிகரிப்பதற்கான யோசனையை முன்மொழிவதாகவும் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும் தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கு சூரிய சக்தியை உபயோகிப்பதற்கும் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.
செலவீனங்கள் கட்டுப்படுத்துவதற்காக நிதி அமைச்சால் வருடாந்தம் அரசாங்க திணைக்களங்களுக்கு வழங்கப்படும் நிதியை காலாண்டு விதத்தில் பகுதி பகுதியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக வெளியிடப்பட்ட அனைத்து கருத்துக்களும் வரவு செலவுத்திட்ட தயாரிப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் மருந்துவகைகளை உற்பத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரச சேவையில் ஓய்வு பெரும் வயதெல்லை 65 வயதுவரை நீடிப்பு, இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது.
புதிய வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, 2022 ஆம் ஆண்டு பதிவு செய்வதற்கான கட்டணம் அறிவிடப்படாது.
வரிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரி திணைக்களத்தை பலப்படுத்துமாறும் யோசனை முன்வைக்கின்றோம். தொலைக்காட்சிகளுக்கான அலைவரிசை பகிரங்க ஏலத்தில் விடப்படும்.
நாடு முழுவதுமுள்ள 7 லட்சம் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களை பாதுகாப்பதற்கு முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க முன்மொழிவு முன்வைக்கப்படும்.
கையடக்கத் தொலைபேசி அலைவரிசைகளை, நாடு முழுவதும் விரிவுப்படுத்தி, நாடு முழுவதும் உள்ள 10155 பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை வழங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
இயற்கை உர தயாரிப்பை மேம்படுத்துவதற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாக அதனை முன்னெடுக்க முன்மொழியப்படும்.
இளைஞர்களை வேலைத் தேடுபவர்களுக்கு பதிலாக தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகின்றோம்.
இலங்கையை ஐந்து மகா கொள்கைளைக் கொண்ட நாடாக மாற்றுவோம்.
மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு, வீடுகள் போன்ற கட்டடங்களை நிர்மாணிக்கும் போது, அதற்கான அனுமதியை உரிய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் 130,000 பேருக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணியை அதிகரிப்பதற்காக, தூதுவர்களுடன் கலந்துரையாடி வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளர்த்தி புதிய முறைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நஞ்சற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் செலவுகளைப் பொறுத்தவரையில், அவை பொதுமக்களுக்கான முதலீடுகள் என்றே கருதுகிறேன்.
புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகளை கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மய்யமாக மாற்றுவது எமது நோக்கமாகும்.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் விவசாய தொழில்நுட்பத்தை துரிதமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும்.
பெருந்தோட்ட, சிறு பயிர்ச்செய்கைகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.
நன்னீர் மீன்பிடி தொழில்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பால் உற்பத்தியை மேம்படுத்தி, பால் பயன்பாட்டை அதிகரிக்க முன்மொழியப்படுகின்றது.
அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 ரூபாய் மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வீதி அபிவிருத்திக்காக மேலும் 20,000 மில்லியன் ரூபாவை பெருந்தெருக்கல் அமைச்சுக்கு வழங்கப்படுகின்றது.
அரச காணிகள், தனியார் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை அடையாளம் காணும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும்.
ஆயுர்வேத வைத்திய மத்திய நிலையங்களை புதிதாக உருவாக்கவும் மற்றும் இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
லயன் வீடுகளை 3 வருடங்களில் இல்லாது செய்யும் நோக்குடன், லயன் வீடுகளை அபிவிருத்தி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டுக்காக 500 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
நகர வீட்டு அபிவிருத்தி திட்டத்திற்கு 2000 மில்லியன் ரூபாவும், கிராம வீட்டு திட்ட அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
தமது தொகுதிகளின் அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை மேலும் 5 மில்லியன் ரூபாவினால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் மொத்தமாக 3375 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான மொத்த, சிறு, மத்திய வியாபாரங்கள் மேற்கொள்வோரின் நலன் கருதி 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும், பாடசாலை மூடப்பட்டமையால் பாதிக்கப்பட்ட பஸ், வேன் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடும், கொரோனா தொற்றுக்காலத்தில் பாதிப்புக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 700 மில்லியன் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 1500 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பசில் தனது உரையில் தெரிவித்துள்ளார்.