வவுனியாவில் மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

வவுனியா,ஓக 21

வவுனியா ஏ9 வீதியில் ஆடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஏ9 வீதி, தேக்கவத்தைப் பகுதியில் இன்று (21) அதிகாலை 2 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து 97 ஆடுகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிச் சென்ற பாராவூர்தியும், வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கி வந்த மோட்டர் சைக்கிளும் ஏ9 வீதி தேக்கவத்தைப் பகுதியில் கட்டுப்பாட்டையிழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் 22 வயதுடைய வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார என்பவராவார்.

விபத்தையடுத்து பாரவூர்தி சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் கொண்டு செல்லப்பட்ட 97 ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணையின் பின் சாரதியையும், ஆடுகளையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *