யானைக்கு பின்னால் தாமரை மொட்டின் ஊர்வலம்! எச்சரிக்கும் எம்.பி.

நீண்டகாலம் செல்லும் முன்னர் சிறிகொத்தவுக்கு (ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகம்) செல்லும் யானை ஊர்வலம் போல், தாமரை மொட்டு ஊர்வலமும் செல்லும் அடையாளம் தென்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவள தெரிவித்துள்ளார்.

அப்படி நடந்தால், ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அழிவான நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பண்டாரகம பிரதான அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருடன் பின்னடைவை சந்தித்து அழிந்தது. இதனை முழு நாடும் அறியும்.

ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெப்பதற்கு இதுவே சிறந்த காலம் என தற்போது ரணில் விக்ரமசிங்க எண்ணுகிறார். இதன் காரணமாகவே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி அழிந்து வருகிறது.

யானை ஊர்வலம் சிறிகொத்தவுக்கு செல்வது என்பது ஐக்கிய மக்கள் சக்தி அழியும் என்பதாகும். அதேபோல் அந்த யானை ஊர்வலத்திற்கு பின்னர் தாமரை மொட்டு அணியும் சிறிகொத்தவுக்கு செல்லும் அடையாளங்கள் தென்படுகிறது.

அந்த ஊர்வலத்தில் இருப்பவர்கள், கொள்கை, வன்முறை, ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளான நபர்கள். இதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே ரணிலை துதிப்பாட ஆரம்பித்துள்ளனர்.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் புரிந்துக்கொள்ள வேண்டும். இதனை புரிந்துக்கொள்ளவில்லை என்றால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு அன்று ஏற்பட்ட நிலைமையே பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படும் எனவும் லலித் எல்லாவள தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *