திருடிய பசுவை நடுவீதியில் கைவிட்டு தப்பி ஓடிய திருடர்கள் – யாழில் சம்பவம்

திருடிச் செல்லப்பட்ட பசு மாட்டைக் கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் குறித்த பசு பாதுகாப்பாக மீட்கப்பட்டு பசுவின் உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(19.08.2022) நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதி வழியாக பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் ஊரவர்கள் கண்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் துவிச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்ததாகவும் தெரிய வருகிறது.

அதன் பின்னர் யாருடைய மாடு? எங்கே கொண்டு போகிறீர்கள்? என விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் சரியாகப் பதிலளிக்காமல் பசுமாட்டைக் கைவிட்டுச் சைக்கிளில் ஓடித் தப்பியுள்ளனர்.

பசு மாட்டைப் பிடித்த ஊரவர்கள் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிற்குத் தகவல் வழங்கியுள்ளனர். நேற்று காலையில் பொலிஸார் குறித்த பசுமாட்டைப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த பசுமாடு தன்னுடையது எனவும், திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மந்துவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுக் காலை கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று உரிமை கோரியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் மாலை வரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில் மாலை பசு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீசாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக் காலமாகத் தொடர் மாடுகளின் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் கொடிகாமம் பொலிஸார் இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அசிரத்தையுடன் செயற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *