
நாட்டுக்குக் கிடைத்த வரம் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை மக்கள் ஏளனமாகப் பேசினர். நகைப்புக்கு உள்ளாக்கினர். ஆனால், கடைசியில், இந்த கடினமான நேரத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்தது போல ஒரு செயலைச் செய்ய வேண்டியதாயிற்று. பிரதமர் பதவியை ஏற்றார், ஜனாதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டார்.
ஏனையோருக்கும் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏற்க முன்வரவில்லை.
நாட்டைக் கட்டியெழுப்பும் காவலராக மாறி பொறுப்பை சுமக்க முன்வந்துள்ளார்.
ஒரு விடயம் நடக்க வேண்டுமாயின் தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும் என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகிறார்.
தூர நோக்குடன் செயற்படும் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில், நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்புவார்.
– இவ்வாறு மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரத்ன நாயக்க தேரர் தெரிவித்தார்.
மிஹிந்தலை புனிதத் தளத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பயணம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது அனுசாசன உரை நிகழ்த்திய கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1989 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்பன செயற்பட்டன. டிரான்ஸ்போர்மர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. மறுபுறம் குண்டுகள் வெடித்தன. ஆனால், அந்தநேரத்தில் கூட, நாடு இத்தகைய அழுத்தங்களுக்கோ, இவ்வளவு கடினமான சூழ்நிலைக்கோ தள்ளப்படவில்லை.
இன்று, ஒரு பக்கம், கொரோனா தொற்று, மறுபக்கம், அரசியல் ஸ்திரமின்மை. அதே போல் இனவாதம், மதவாதம் அனைத்தும் உள்ளன. நாடு இருந்தாலும், இறுதியில் நாட்டில் சட்டம் இல்லாமல் போனதை நாம் அறிவோம்.
பொலிஸாரின் வாகனங்களைப் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் சோதனை செய்கின்றனர். சட்டத்தை தனிநபர்கள் கையில் எடுத்தனர். பொலிஸாரை அடிக்க ஆரம்பித்தனர். ஆயுதங்கள் திருடப்பட்டன. இதுபோன்ற பல்வேறு விடயங்களைச் செய்தார்கள்.
இறுதியில், ஒரு வரம் போல் இந்த நாட்டுக்கு நல்லது செய்ய முன் வந்தீர்கள். உங்கள் வீடு கூட ரோயல் கல்லூரிக்கு எழுதப்பட்டுள்ளது. உலகத்திலோ அல்லது இலங்கையிலோ உங்களுக்கு வேறு ஒரு அங்குல நிலம் கூட இல்லை. இருந்தவையும் பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு தன்னலமற்ற குணம் கொண்டவர் தான் எமது ஜனாதிபதி ரணில்.
கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை மக்கள் ஏளனமாகப் பேசினர். நகைப்புக்கு உள்ளாக்கினர். ஆனால், கடைசியில், இந்த கடினமான நேரத்தில் தண்டவாளத்தில் தலையை வைத்தது போல ஒரு செயலைச் செய்ய வேண்டியதாயிற்று. பிரதமர் பதவியை ஏற்றார், ஜனாதிபதி பதவியையும் ஏற்றுக்கொண்டார். ஏனையோருக்கும் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏற்க முன்வரவில்லை.
என்ன கூறினாலும் கடைசியில் அரச பதவியைப் பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த நாட்டைப் பொறுப்பேற்கவும், இந்த மாபெரும் புனித பொக்கிசங்களுக்கு பொறுப்பாக இருப்பதற்கும், பல்வேறு மதங்கள் மற்றும் வெவ்வேறு இனங்கள் அனைத்தையும் பொறுப்பேற்கக் கிடைப்பதும் ஒரு அதிர்ஷ்டம்” – என்றார்.