இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்

கேரளா, ஓக 22

இந்தியாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறினால், பெரியவர்களுக்கு பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கடந்த மே 6ஆம் திகதி முதல் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் நெடுவத்தூர், ஆரியங்காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வயதுக்குட்பட்ட 26 சிறுவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு, சிக்குன்குன்யா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றும். இது சற்று பெரிதாகி தக்காளி போல சிவப்பாக தோன்றும். இதனாலேயே இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொற்றும் தன்மை கொண்டதாகும்.
பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. உடல், மூட்டு வலி கடுமையாக இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும். அதேநேரம் இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறினால், பெரியவர்களுக்கு பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *