
மானிய விலையில் மீனவர்கள் மண்ணெண்ணெய் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட மீனவர்கள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் தினேஸ் சுரேஜன் தெரிவித்தார்.
கற்பிட்டியில் உள்ள புத்தளம் மாவட்ட மீனவர்கள் சங்கங்களின் ஒன்றிய அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் போது மேலும் கூறியதாவது,
இலங்கையில் எரிபொருள் பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக காணப்பட்ட போதிலும் இப்போது பெற்றோலும், டீசலும் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இதுவரையும் மண்ணெண்ணைய் விநியோகிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று மீனவர்கள் கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக புத்தளம் மாவட்ட மீனவர்கள் மாத்திரமில்ல, ஏனைய மாவட்ட மீனவர்களும் தொழில் இன்றி பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
அனைத்து மீனவர்களின் மீன்பிடி படகுகளும் கரையோரங்களில் நாட்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறன.
இவ்வாறு மண்ணெண்ணை இன்றி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் நேற்றைய தினம் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சூழ்ச்சியாகவே நாம் பார்க்கிறோம். தமது சுய இலாபங்களுக்காக இந்த அரசாங்கம் மீனவர்களை அடகு வைப்பதாகவே கருதுகிறோம்.
புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினுடைய மீனவ துறைமுகம் கற்பிட்டி நகரில்தான் இருக்கின்றது.
அந்த மீனவத் துறை முகத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் பத்தலங்குன்று தொடக்கம் உடப்பு வரைக்கும் முந்தல் தொடக்கம் பூக்குளம் வரைக்கும் உள்ள பகுதிகளில் எட்டு கடற்றொழில் பிரதேசங்கள் இருக்கின்றது. இங்கு 3500 மீன்பிடி படகுகளுக்கு மேல் தொழிலை மேற்கொள்கின்றன.
ஆனால் ஒரே ஒரு மீனவ துறை முகத்தில் மட்டும் 5 லீற்றர் மண்ணெண்ணை வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் மண்ணெண்ணையைக் கொண்டு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாது.
ஒரு நாளைக்கு மீன்பிடித் தொழிலை செய்ய 20 லீற்றர் வரை மண்ணெண்ணை தேவைப்படும்.
எனவே, மீனவர்களுடைய பிரச்சினையை கவனத்திற் கொண்டு மானிய முறையில் மண்ணெண்ணைக் கொடுக்க கடற்தொழில் அமைச்சரும், அமைச்சின் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பிற செய்திகள்