கிழக்கு மாகாண அம்பாறை மாவட்டத்தில் இம் முறை நீதிபதியாக ஒரேயொரு தமிழ் இளம் பெண்மணி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (15)திங்கட்கிழமை, அவர் நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுக்கவுள்ளார்.
நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தி பெற்று நேர்முக பரீட்சையிலும் தெரிவு செய்யப்பட்ட ஜெகநாதன் சுபராஜினி, மிக இள வயதில் நீதிபதியாகின்றார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவான முதலாவது பெண்நீதிபதி ஜெகநாதன் சுபராஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த(சா/தர) வரை கற்று 9 பாடங்களிலும் அ சித்தி பெற்று, உயர்தரத்தில் கலைப் பிரிவை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது
அவ்வகையில் க.பொ.த(சாதாரண தரப்) பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதிதிறமை சித்திகள் பெற்று முதலிடம் க.பொ.த (உயர் தரப்) பரீட்சையில் மூன்று அதிசிறந்த சித்திகள் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை, பின் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானி பட்டத்திலும் உயர்வுசித்தி பெற்றமை மற்றும் தற்போது முதற் தடவையாக நீதிபதிப் பரீட்சைக்கு தோற்றி கிழக்கு மாகாணத்தில் சிறுவயதில் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதற் பெண்மணி என்ற பெருமையின் மகுடமும் ஜெகநாதன் சுபராஜினியே சாரும்.
ஓர் சாதனையை அடைவதற்கு சிறந்த வழி காட்டி சிறந்த ஆசான் அவசியமாகும். அதனடிப்படையில் ஜெகநாதன் சுபராஜினிஇச்சாதனையை சுவைப்பதற்கு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் மட்டுமன்றி உற்ற துணையாகவும் அவரது கணவர் சிரேஷ்ட சட்டத்தரணி சொலிசிற்றர் மற்றும் பரீஸ்டர் சிந்தாத்துரை ஜெகநாதன் அமைந்தது ஒரு வரப்பிரசாதமாகும்.
இவ்விதம் தெரிவான நீதிபதி சுபராஜினியை பாராட்டி சமுகவலைத்தளங்களில் பரந்தளவில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுவருகிறது.






