பாராளுமன்றத்தை கலையுங்கள் – ஜே.வி.பி. மீண்டும் வலியுறுத்து!

ராஜபக்சக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, தொடர்ந்து அடுத்த மூன்று வருடங்களையும் மோசடிகாரர்களுடன் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றார். அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. அதனால் பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

நுகேகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கோத்தாபய ராஜபக்ஷ் சென்று ரணில் விக்ரமசிங்க வந்த பின்னர் போராட்டத்துக்கு சிறிதொரு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வுக்குள் பொலிஸார் தடிகளை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்.

அடக்கு முறையை கையாள ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களிடம் நாங்கள் சொல்லிக்கொள்வது, நீங்கள் தற்போது நரகத்தில் ஓய்வு நேரத்திலேயே இருக்கின்றீர்கள. நீண்ட நேரத்துக்கு இந்த ஓய்வு நேரம் இருக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் இந்த ஓய்வை மிக விரைவாக முடிவுக்கு கொண்டுவந்து, மக்கள் மயமான ஆட்சியை அமைப்போம்.

மேலும் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை எதிர்பார்த்துக்கொண்டு பாட்டுப்பாடிக்கொண்டு இருக்கின்றார். அதனால் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் எந்த பதிலும் இல்லை.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. ராஜபக்ஷ்வினரின் வாக்குகளால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, அடுத்த 3வருடங்களையும் இந்த திருட்டு கும்பல்கள் மோசடிக்காகர்களுடன் கொண்டு செல்லவே முயற்சிக்கின்றார். பிரச்சினைகள் அவ்வாறே இருக்கும் நிலையில் மேலும் 3 வருடங்களுக்கு பாராளுமன்றத்தை கொண்டுசெல்லும்போது என்ன நடக்கும்? இந்த பிரச்சினைகளுடன் மேலும் 3வருடங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அத்துடன் 3வருடங்கள் அல்ல, 3,4 மாதங்கள்கூட எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அதற்கு நாங்கள் தயார் இல்லை. அதனால் ரணில் விக்ரமசிங்க  பொருட்களை சுருட்டிக்கொண்டு தங்களின் கூட்டத்துடன் வெளியேறிச்சென்று விடவேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்தி மக்கள் ஆணை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *