புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு தனது முதற்கட்ட பேச்சுவார்த்தையை இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் ஒன்றான நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்புடன் இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார
இப் பேச்சுவார்த்தையில் அவுஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த தமிழ் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்மக்களின் மிக முக்கிய பிரச்சனைகள் பற்றிப் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்பேச்சில் இரண்டு செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்பான நீதி மற்றும் சமத்துவத்திற்கான கனேடியர்கள் அமைப்பினர் முன்வைத்துள்ளனர்
தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனை எதுவும் இன்றி விடுதலை செய்யவேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியும் காவல்துறையின் அச்சுறுத்தல்களை நிறுத்தவேண்டும்.

இவ்விரு செயற்பாடுகளும் உடனடியாக செயற்படுத்தப்பட்டு தமிழ், சிங்கள மக்களின் நல்லுறவுக்கான அடையாளமாக முதல் பச்சைக்கொடியை சிங்கள அரசு காட்டுமிடத்து தொடர்ந்து தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்நகர்த்தமுடியும் எனவும், தமிழர்களுக்கான சமஉரிமை, அரசியல், சமாதானம் என அனைத்தையும் கட்டியெழுப்ப சிங்கள அரசு முன்வரவேண்டும் என இந்த பேச்சுவார்த்தையில் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டபோது,

அவற்றை ஏற்றுக் கொண்ட நீதிஅமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்வதற்கான வழிவகைகளை துரிதப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழர்களின் அரசியல் அதிகாரத்திற்கான பச்சைக்கொடி காட்டுவார்களா?அல்லது கடந்த காலத்தைப்போல கடந்து செல்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்