சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும்! பெற்றோரிடம் வலியுறுத்து

மலையக சிறுவர்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பில் பெற்றோர் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் மரணமடைந்த சிறுமி ஹிசாலினியின் துயரம் நிறைவடைவதற்கு முன்னால் மற்றுமொரு இழப்பு தற்போது ஏற்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் நிலவுகின்ற வறுமையே இவ்வாறான மரணங்களுக்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடைத்தரகர்கள் தங்களுடைய இலாபத்திற்காக இவ்வாறான சிறுவர்களை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இடைத்தரகர்களாக செயற்படுகின்றவர்களை இனம் கண்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும். மலையக இளைஞர் யுவதிகள் இந்த விடயத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும்.

இதேவேளை, கம்பஹா பகுதியில் உள்ள வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மஸ்கெலிய சிறுமியின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

குறித்த சிறுமி நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கியமையாலையே மரணித்தததாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கம்பஹா நைவல வீதி – உடுகம்பளை பகுதியிலுள்ள வீட்டுக்கு தொழிலுக்கு அண்மையில் சென்றிருந்தார்.

இந்தநிலையில் குறித்த வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்தில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சுத்தப்படுத்தல் பணிகளை மேற்கொள்வதற்காக குறித்த சிறுமி நீச்சல் தடாகத்தில் இறங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சீ.சீ.டி.வி காணொளி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கம்பஹா காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

எனவே, சிறுமி நீச்சல் தடாகத்தில் உள்ள நீரில் மூழ்கியமையினாலேயே மரணித்தததாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதிக்கிரியை நேற்று இடம்பெற்றது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *