இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்தது சிம்பாப்வே- ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது இந்தியா!

சிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் இந்தியா அணி முழுமையாக வென்றது.

ஹராரே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 130 ஓட்டங்களையும் இசான் கிசான் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், பிரெட் எவண்ஸ் 5 விக்கெட்டுகளையும் யாயுச்சி மற்று ஜோங்வே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 290 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணி, 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், ந்தியக் கிரிக்கெட் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சிகண்டர் ரஸா 115 ஓட்டங்களையும் சீன் வில்லியம்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அவிஷ்கான் 3 விக்கெட்டுகளையும் தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாகூர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *