மண்ணெண்ணைய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு கண்டனத்தை வெளியிடுவதுடன், மண்ணெண்ணையை பெற்றுக்கொள்வதில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே இவ்விலை அதிகரிப்பு குறித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக மண்ணெண்ணையை நம்பிதான் உள்ளது. மண்ணெண்ணை விநியோகம் சீராக இடம்பெறாமையால் அவர்களது பணிகள் கடந்த சில மாதங்களாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. கடல் உணவுகளின் விலைகளும் பாரிய அளவில் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் 87 ரூபாவாக இருந்த மண்ணெண்ணை 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நான்கு மடங்கு விலை அதிகரிப்பாகும்.
மண்ணெண்ணையை நம்பி பொருளாதாரத்தை மேற்கொள்ளும் அனைத்து மக்களும் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பெருந்தோட்ட மக்களும் தமது அன்றாட தேவைகளுக்கும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்.
இதேபோன்று பொருளாதார ரீதியாக பின்தள்ளப்பட்ட குறைந்த வருமானத்தை கொண்ட தரப்பினரும் மண்ணெண்ணையை நம்பிதான் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர்.
ஆகவே, எரிசக்தி அமைச்சு உடனடியாக இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிற செய்திகள்