கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் – டக்ளஸ்

சமுர்த்தி திட்டத்தை பெறும் மக்கள் கையேந்தும் நிலையிலேயே தொடர்ந்தும் இருக்காமல், அதை பயன்படுத்தி பொருளாதார ரீதியில் சுயமாக எழுந்து நிற்கக் கூடிய மக்களாக மாற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான  கருத்துக்களை நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , “அத்துடன், இம்முறை பாதீட்டில் 17 இலட்சத்து 93 ஆயிரத்து 533 சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களுக்கென 50 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் பெருமளவினர் காத்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

எனவே, தற்போது நடைமுறையில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் பட்டியலை மீளாய்வுக்கு உட்படுத்துவது நல்லதென நினைக்கின்றேன்.

இதேநேரம் உலகளாவிய அனர்த்தம் காரணமாக வாழ்வாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர்கள் போன்றோருக்கான சலுகைகள், நிவாரணங்கள் போன்ற செயற்திட்டங்கள் பெரிதும் வரவேற்கத்தக்க திட்டங்களாகும்.

அதேபோன்று பட்டாதாரிகளுக்கான மேலும்,  வேலைவாய்ப்பு வழங்குவது என்ற விடயமும், பட்டதாரிகளுக்கான நியமன நிரந்தரமாக்கலும் காலத்தின் தேவையாகவுள்ளன. எமது ஜனாதிபதி அவர்கள் பதவியேற்றதன் பின்னர் இதுவரையில் 63 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம். காணாமற்போனோர் தொடர்பில் பரிகாரம் காண்பதற்கான ஒரு மனிதாபிமான செயலாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தனது அவதானத்தைச் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.

உறவுகள், தோழர்கள், என்னோடு பழகியவர்கள் காணாமற்போனதன் வலியை நான் உளமார  உணர்ந்தவன் என்ற வகையில், காணமற்போன உறவுகளது உறவினர்களது உணர்வுகளையும் நான் அறிவேன்.

காணாமற் போனோரது உறவுகள் என்னைச் சந்தித்து, என்னிடம் வெளிப்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளை ஜனாதிபதியிடமும் அவர்களிடமும் வெளிப்படுத்தி, நியாயமான கலந்துரையாடலுக்கு முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் இம்முறை வரவு – செலவுத் திட்டமானது, தேசிய உற்பத்தியை இலக்காகக் கொண்ட, பிரதேச அபிவிருத்திகளின் பாலான முதன்மைத்துவங்களைக் கொண்ட வரவு – செலவுத் திட்டமாக அமைந்திருக்கின்றது.

அந்த வகையில், படிப்படியாக வெளிநாட்டு இறக்குமதி மோகத்திலிருந்து விடுபட்டு, தேசிய உற்பத்தியின்பால் மக்கள் நாட்டம் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய உலக நடத்தைகள் அவ்வாறானதொரு பாடத்தையே ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் உணர்த்தி வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply