
பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகளை தொடர்ந்தும் அரசாங்கம் கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் கோட்டபாய கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு எந்த அழைப்பும் கொடுக்காத நிலையிலும், மக்களுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் தான் இந்த காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுத்த நிலையில் அதனை நாங்கள் தடுத்துநிறுத்தியுள்ளோம்.
மீண்டும் ஒரு தடவை மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூட்டத்தினை நடத்தி அதன் பின்னர் எந்த முடிவாக இருந்தாலும் அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
2014 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சம்மந்தமான முதலாவது நடவடிக்கை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. அன்றைய சூழலில் காணி உரிமையாளருக்கு பொதுமக்களுக்கு அபாயகரமான சூழல் இருந்தது. போராட முடியாதளவு மகிந்த ஆட்சிகாலத்தில் அச்சுறுத்தல் இருந்தது அதனால் பயந்து வீட்டிற்குள் இருந்தார்கள்.
அதன் பின்னர் காணிகோரி போராடிய மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இன்றும் வட்டுவாகல் கோட்டபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் என்று போராடி வருகின்றார்கள்.
சிலர் இந்த காணிகளை மறைமுக அச்சுறுத்தலால் தான் அரசாங்கதிற்கு கொடுப்பதற்கு விரும்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களின் மனட்சாட்சியின் படி விரும்பம் இன்றித்தான் செய்கின்றார்கள்.
இன்று இருக்கின்ற பொருளாதார சூழல், மக்கள் வறுமையில் இருக்கின்றார்கள் ஏதாவது சொத்துக்களையோ நகைகளையோ காணிகளையோ விற்று உயிர்வாழ்வதற்காக விற்று பிளைக்கின்ற நிலமை இருக்கின்றது.
அரசாங்கம் பொருளாதார சுமையினை மக்கள் மீது கொண்டு வந்துவிட்டு மக்களின் ஏழ்மையினை பயன்படுத்தி மக்களின் காணிகளை பறிமுதல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.
அரசாங்கம் உடனடியாக காணி அபகரிப்பினை நிறுத்தவேண்டும், கடைசியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபரை சந்திக்கின்றபோது இந்த காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்படவேண்டும், காணி அளவீடுகள் செய்வதையும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கோரியிருந்தோம்.
இவ்வாறு கோரி குறுகிய நாட்களுக்குள்ளேயே இந்த அரசாங்கம் அதே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஆனால் கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடருகின்றது.
ஆகவே உண்மையில் ஏற்றுக்கொள்ளமுடியாது, தடுக்கப்படவேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக எங்கள் மக்களின் காணிகளை அரசாங்கம் தொடர்ந்து கபளீகரம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் அழுத்தம் திருத்தமாக ஒன்றை சொல்லி வைக்கவிரும்புகின்றோம்.
இல்லையேல் இந்த அரசாங்கம் தொடர்ந்து தமிழ்மக்களின் போராட்ட அழுத்தங்களுக்குள்ளேயே ஆட்சி செய்யவேண்டிய நிலமை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்