ரொசிட்டா தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்குமிடையிலான முறுகலுக்கு தீர்வு!

கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் தொழிலாளர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த தோட்டத்தில் பல்வேறு கெடுபிடிகளை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் மீது நடத்தி வந்துள்ளது.

இதனையடுத்து, இப்பிரச்சினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஜீவன் தொண்டமான், உடனடியாக கொட்டகலை ரொசிட்டா தோட்ட காரியாலயத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு தோட்ட முகாமையாளருடன், தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் கெடுபிடிகளை சுட்டிக்காட்டி கலந்துரையாடினார்.

அதன்பிறகு, இதனை ஏற்றுக்கொண்ட தோட்ட நிர்வாகம், ஒரு சுமூகமான நிலைமைக்கு வந்ததையடுத்து, பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் பாலசுப்பிரமணியம், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *