
கொழும்பு,செப் 15
இலங்கை கிரிக்கெட் சபையில் தற்போது சுமார் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருப்பதாகவும், அந்த கையிருப்பு நியூசிலாந்து கிரிக்கெட்டின் கையிருப்பு பணத்தை விட அதிகமாகும் இலங்கை கிரிக்கெட் சபையில் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகபட்சமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டி நடைபெறும் காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக இந்த தொகை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஷம்மி சில்வா, இந்த பணக் குவியல் தொடர்பில் அனைவரும் இலங்கை கிரிக்கெட் சபையையே நோக்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ணத்தை இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொண்டு சென்றதன் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிக இலாபம் கிடைத்தது. இந்த போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கோ அல்லது இலங்கைக்கோ நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக யார் கூறினாலும் அவர்களுடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





