மறைந்த மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நியூயோர்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப் பாதுகாப்பது பிரித்தானிய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும் என கூறியுள்ளது.

இதனிடையே திங்கட்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரித்தானிய எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர பொலிஸ்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயற்படும். பிரித்தானிய பொலிஸ்துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும். மற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது பெரும் செலவாகும் என கருதப்படுகிறது.

70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96ஆவது வயதில் கடந்த 8ஆம் திகதி ஸ்கொட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார். தற்போது அவரது உடல், வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள மாட்டார் என்று வத்திகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸிற்கு பதிலாக வத்திகனின் வெளியுறவு அமைச்சர் பால் கல்லகர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply