
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு குழு உருவாக்கப்படுவதற்கான ஏற்பாட்டுக்கு முன்னாள் போராளி பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந் தலை பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கி அதன் ஊடாக நிகழ்வு ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், மூத்த முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்து பகிர்வுகளை தொடர்ந்து முதல் கட்டமாக பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்காக மாவீரர்களின் தந்தையும் மூத்த போராளியான பஷீர் காக்கா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெசிந்தன், யாழ். மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் மு.கோமகன், முன்னாள் அரசியல் கைதியான அரவிந்தன், முன்னாள் போராளியான செழியன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்தக் குழுவானது எதிர்வரும் நாள்களில் மதகுருமார்கள், அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள், பொது அமைப்புக்கள் என அனைத்து தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு பொதுக்கட்டமைப்பின் உருவாக்கம், அதன் நோக்கம், எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பில் எடுத்துக்கூறி அவர்களையும் ஒன்றிணைத்து முழுமையான பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.





