கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன்: எனேயா பாஸ்டியாநினி சம்பியன்!

மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் சுற்றில், டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம் நடப்பு ஆண்டு 21 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது.

அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான கிரான் பிரீமியோ அனிமோகா பிராண்ட்ஸ் டி அரகோன் பிரிக்ஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சியுடாட் டெல் மோட்டார் டி அரகோன் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 116.8 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுகார்டி அணியின் எனேயா பாஸ்டியாநினி, பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 35.462 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய, பந்தய தூரத்தை 0.042 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ, 06.139 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டராரோ மூன்று சம்பியன் பட்டங்களுடன் 211 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுகார்டி அணியின் பிரான்செஸ்கோ பெக்னய ஆறு சம்பியன் பட்டங்களுடன் 201 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அப்ரில்லா அணியின் அலிக்ஸ் எஸ்பர்காரோ ஒரு சம்பியன் பட்டத்துடன் 194 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

16ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 25ஆம் திகதி மொபிலிட்டி ரிசார்ட் மோடேகி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *