
கொரோனா பெருந்தொற்றின் பின்னரான காலப்பகுதியில் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் தாக்குதல் சம்பவங்கள் யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.
ஆரம்ப வகுப்பு மாணவர்கள் மீது மிக மோசமாக ஆசிரியர்கள்தாக்குவதால் பாதிப்படையும் மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவற்றில் இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் நீதிமன்றம் வரையில் சென்றுள்ளன.
தாக்குதல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சிறப்புக் கவனம் எடுத்து விசாரித்து வருகின்றது. சித்திரவதை என்ற சட்டவரம்புக்கு கீழ் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
மாணவர்களை தண்டிப்பதை தாண்டி மிக மோசமாக தாக்குவது தொடர்பில் அலட்சியமாக இருக்க முடியாது என்று மாவட்டச் செயலகக் கூட்டத்தில் அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாதத்தில் ஆகக் குறைந்தது இரண்டு மாணவர்களாவது, ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.
ஆசிரியர்களின் செயல்திறன் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொள்ளும் அழுத்தங்களும் மாணவர்கள் மீது மோசமான தண்டனை – தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கான காரணிகளில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
ஆசிரியர்களின் இத்தகைய போக்குகளை கட்டுப்படுத்துவதற்காக அவர்களிடையே விழிப்புணர்வுச் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.





