இலங்கை ஆயுதப் படைகளால் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்! கஜேந்திரன் எம்.பி.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் இலங்கை ஆயுதப் படைகளால் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

கடந்த 19-09-2022 அன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அமர்வில் விடயம் 3 இன் கீழ் அனைத்து மூத்த பிரசைகளும் சகல மனித உரிமைகளையும் அனுபவிப்பதனை உறுதிப்படுத்துவதற்கான விசேட நிபுணரின் அறிக்கை மீதான இடையீட்டு விவாதத்தில் இணைவழி மூலமாக உரையாற்றியிருந்தார்.

அதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

மேலும், அபிவிருத்திக் கொள்கைகளின் விளைவுகளில் ஆழமான பகுக்கப்பட்ட தரவுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த சிறப்பு அறிக்கையாளருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

தமிழர் என்ற அடையாளத்தின் காரணமாக தமிழ் முதியோர்கள் நீதி, சுகாதாரம், வீடுகள் போன்றவற்றைப் பெறுவது போன்ற விடயங்களில் பாகுபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்பதை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம்.

தமிழர்கள் கடந்த 74 ஆண்டுகளாக கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக அக்டோபர் 2008 முதல் மே 2009 வரை, 147000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ஆக்கிரமிப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் இலங்கை ஆக்கிரமிப்புப் படையினரால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுதனால் அவர்களது மனித உரிமைகள் மீறப்படுவதுடன் வறுமையின் சுழற்சியில் இவர்களை தக்கவைக்கப்படுகின்றார்கள். இது இவர்களுக்கு எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கின்றது.

மேலும், ஐ.நாவினால் வகுக்கப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளை தமிழர்கள் எட்ட முடியாதவாறு இவர்கள் அச்செயற்திட்டங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தும் படி பரிந்துரைக்குமாறு சிறப்பு அறிக்கையாளரை வலியுறுத்துகின்றோம்.

விசேட அறிக்கையாளரான திருமதி கிளாடியா மஹ்லர் அவர்களே, அரசியல், நீதி, பொருளாதார, சமூக மற்றும் கலாசார கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களின் அபிவிருத்தியில் தமிழ் மக்களை அனைத்து மட்டங்களிலும் இலங்கை அரசு உள்ளடக்குமா என்பதனை நீங்கள் தங்களது அடுத்த அறிக்கையில் சேர்ப்பீர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply