வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

கொழும்பு,செப் 25

இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியமை தொடர்பாக  ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிபதியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

நிதிச் செய்தி சேவை நிறுவனமான ப்ளூம்பெர்க் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு “நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டின்  மீது செல்வாக்கு செலுத்தி மற்ற வெளிநாட்டு கடன் வழங்குநர்களை விட நலன் பெறுவதற்கான வெளிப்படையான முயற்சி” என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

ஒரு பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தை, இலங்கை  செலுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் & நெவிஸை தளமாகக் கொண்ட ஹமில்டன் ரிசர்வ் வங்கி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை, கடந்த  2022 ஜூலை 25ஆம் திகதி அன்று  5.875% வட்டியில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை  செலுத்த வேண்டியிருந்தது.

இதேவேளை, பத்திரங்களின் விதிமுறைகளின்படி, இலங்கை, அந்த வங்கிக்கு மொத்தம் 257,539,331.25 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இது 250,190,000 டொலர் அசல் மற்றும் 7,349,331.25 டொலர் வட்டியை உள்ளடக்கியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply