ஒத்துழைப்பே பட்டினியை முடிவிற்குக் கொண்டுவரும் திறவுகோல்! இலங்கைக்கு அமெரிக்கா மீள் உத்தரவாதம்

இலங்கை மக்கள் தொடர்பில் அமெரிக்கா கொண்டிருக்கும் நீண்டகாலக்கடப்பாடு தொடர்பில் மீள் உத்தரவாதத்தை வழங்கியுள்ள ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சின்டி மெக்கெய்ன், ஒத்துழைப்பே பட்டினியை முடிவிற்குக்கொண்டு வருவதற்கான திறவுகோலாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) நாட்டை வந்தடைந்த ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவைச் சந்தித்து, பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை மக்கள் குறித்து அமெரிக்கா கொண்டிருக்கும் நீண்டகாலக்கடப்பாடு தொடர்பில் மீள் உத்தரவாதத்தை வழங்கியதாக அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத்திட்டம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம், யுனிசெப், சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு, உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நீர்வழங்கல் முகாமைத்துவ நிறுவனம் ஆகிய முகவரமைப்புக்களின் இலங்கைக்கான பிரதிநிதிகளை நேற்றைய தினம் சந்தித்த சின்டி மெக்கெய்ன், பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததுடன், ‘ஒத்துழைப்பே பட்டினியை முடிவிற்குக்கொண்டுவருவதற்கான திறவுகோலாகும்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி வடமத்திய மாகாணத்தின் குளியாப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேவத ஆரம்பப்பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவரமைப்புகளுக்கான அமெரிக்காவின் நிரந்தரப்பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ஒட்டுமொத்த சமூகத்தினதும் உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் மரக்கறி பயிர்ச்செய்கையையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply