
கொழும்பு, செப். 28: “தமிழீழ விடுதலைப்புலிகள் இந்நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இருந்து மரணித்தவர்களை யாராவது பகிரங்கமாக நினைவுகூர்ந்தால் அவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் “மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் 12 நாட்கள் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவேந்தியுள்ளார்கள். திலீபனின் படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனிகளும் வீதிகளில் வலம் வந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் கூட திலீபனைத் தமிழ் இளைஞர்கள் நினைவேந்தியுள்ளார்கள்.
இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸாரும், படையினரும் ஏன் தடுக்காமல் இருந்தார்கள்? எவரின் உத்தரவின் பேரில் பொலிஸாரும் படையினரும் அமைதி காத்தார்கள்?” – என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.





