
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ். மாவட்டத்தில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி ந.விஜிதரன் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் முழுவதுமாக யாழ்ப்பாணம் மாவட்டம் பூராகவும் பாவனையாளர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டு திடீர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் அடிப்படையில் 63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தினால் 25 இலட்சத்து 74 500 ரூபா தண்ட பணமும் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தவகையில், வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலையினை காட்சிப்படுத்த தவறியமை, அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி பொருட்களினை பொதுமக்களுக்கு விற்றமை, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் விவரங்கள் இல்லாது பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் காட்சிப்படுத்தியமை, நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு பொருட்கள் மீது பொறிக்கப்பட்ட விலையினை மாற்றி புதிய விலையினை சேர்த்தமை, இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தபட்ச 6 மாத கால உத்தரவாத காலம் வழங்க தவறியமை, அரச நியமங்கள் தரச் சான்று பொறிக்கப்படாத பொருட்களை விற்பனை செய்தமை காட்சிப்படுத்தியமை போன்ற விடயங்களை செய்யத் தவறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர்கள் அலுவலர்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களினால் தேடுதல்கள் மற்றும் கண்காணிப்பு விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவுள்ளது.
எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் விதிமுறைகளுக்கு அமைய தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்





