
யாழ்ப்பாணம்,ஒக் 08
யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரே நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது குறித்த சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டனர்.
இந்நிலையில், சந்தேக நபர் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம் எதிரிவரும் 21ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

