
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கிணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஐ 271 என்ற விமானத்தில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.
அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவரை கொழும்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம் இன் இலங்கைப் பயணம் சர்வதேச ரீதியாக முக்கிய விடயமாக பார்க்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு தனது பங்களிப்பை எரிக் சொல்ஹெய்ம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





