இந்தியாவில் முதல் முறையாக இரண்டு நோயாளிகளிடம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை இந்திய சுகாதார அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இரண்டு தொற்றாளர்களும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அவ்விருவரும் 66 மற்றும் 46 வயதுடையவர்கள் என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க, அவர்களின் அடையாளங்களை இப்போது வெளியிட முடியாது என்று கூறினார்.
எனினும், இரண்டு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஒமிக்ரான் கண்டறிதல் பற்றி பீதியடைய தேவையில்லை, ஆனால் விழிப்புணர்வு முற்றிலும் அவசியம்.
கொரோனாவுக்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்றுங்கள், கூட்டங்களைத் தவிர்க்கவும் என்று குறிப்பிட்டார்.
ஒமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
ஆனால் தற்போது கிட்டத்தட்ட 30 நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






