பப்பாசி மரங்களை துவம்சம் செய்த யானைகள்:இரவில் பயங்கரம்!

வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில்  ஒரே இரவில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகளால் முற்றாக துவம்சம் செய்யப்பட்டுள்ளது. 

நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில்  சுமார் 8  ஏக்கர் அளவில் பப்பாசி செய்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் நேற்றையதினம் இரவு குறித்த தோட்டத்தினுள் உள்நுழைந்த  யானைகள் அறுவடைப் பருவத்தில் காணப்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட பப்பாசி மரங்களை முறித்து   நாசப்படுத்தியுள்ளது.

இதேவேளை அதற்கு அருகாமையில் உள்ள காணிக்குள்ளும் புகுந்த யானைகள் ஒருதொகை தென்னை மரங்களையும் முறித்து அழித்துள்ளன.  

மேலும் யானை வேலி அமைக்கப்பட்ட பகுதிகளிலும் அவற்றை யானைகள் சேதப்படுத்தி விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் பகுதிகளில் உள்நுழைந்து நாசப்படுத்துவதாகவும் யானை வேலி அமைக்கப்பட்டும் தமக்கு பிரியோசனம் இல்லாமல் போயுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். 

இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் இவ்வாறு யானைகள் நகர்பகுதிகளுக்குள் வருவதில்லை என்றும் தற்போது வளர்ப்பு யானைகளை இப்பகுதியில் இறக்கிவிடப்பட்டமையே இவ் அழிவுக்கு காரணம் எனவும், விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே இதற்கான சரியான தீர்வினை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply