நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதும் அது முழுமையற்றதாக காணப்படுகிறது. பொருளாதார பாதிப்பினால் எமது வீடுகள் மாத்திரமே இறுதியில் தீக்கிரையாக்கப்பட்டன. அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை இயற்றாததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
ஆகவே இனியாவது இச்சட்டத்தை இயற்றிக் கொள்ள அவதானம் செலுத்த வேண்டும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவ. 28) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. 2001ஆம் ஆண்டு 1.4 சதவீதத்தினால் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது. அக்காலப்பகுதியில் நாட்டின் அன்றாட தேவைக்கு கூட நிதியை திரட்டிக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
தற்போதைய பொருளாதார பாதிப்பு அனைத்து துறைகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. அரச மொத்த வருமானத்தில் பெரும்பாலான பங்கு அரச சேவையாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கவதற்கும் ஓய்வூதியம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளையும் வழங்க ஒதுக்கப்படுகிறது. நாட்டின் ஏனைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வணிக அல்லது அரச முறை கடன்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொருளாதார பாதிப்புக்கு பாராளுமன்றம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் நிதி சட்டத்தின் 148ஆவது ஏற்பாடுகளுக்கு அமைய நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த அதிகாரம் முறையாக முழுமைப்படுத்தப்படவில்லை.
2003ஆம் ஆண்டு அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அரச செலவுகளை கட்டுப்படுத்தல், வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை நிலையான தன்மையில் பேணுவதையும் அரச நிதி தொடர்பான கொள்கை வகுப்பினையும் அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் அடிப்படையாக கொண்டிருந்தது.
நிதி தொடர்பான முறையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததாலேயே நாடு இன்று வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே இனியாவது அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை நிறைவேற்ற அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.





