மானிப்பாயில் இளைஞர்களை வழிமறித்து பாதுகாப்பு படையினர் தாக்குதல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது, பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை, வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார்.

அவர்களை வழிமறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ” தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது” என கூறியுள்ளார்.

பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என வினாவி முரண்பட்ட போது , பொலிஸாருக்கும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர்.

அதேநேரம் வீதியால் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *