இலங்கையர்களுக்கு மேலும் நெருக்கடி – மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம்

2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் 2 கட்டங்களின் கீழ் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட அவை போதாது, எனவே தற்போது மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தேசிய சபை உபகுழுவிற்கு மேலும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை பரிசீலிக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை அமைச்சர் தனது ஓய்வு நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்றும்,மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எந்த அறிவிப்புகளையும் ஆணைக்குழு விடுக்கவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply