நாட்டில் நிலவும் உணவு பஞ்சத்தின் விளைவை விரைவில் அவதானிக்கலாம்- சத்தியலிங்கம் ஆதங்கம்!

உணவு பஞ்சத்தின் விளைவை இன்னும் சில காலத்தில் சுகாதார குறிகாட்டிகளில் அவதானிக்கலாம் என தமிழரசுக்கட்சியின் செயலாளர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில் சேதன நகர வீட்டுத்தோட்டத்தில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என பாதீடு தொடர்பாக பாராளுமன்றத்தில் கதைக்கும் அரசியல்வாதிகளும் மற்றும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஏற்கனவே இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. இதன் தாக்கம் இன்னும் சில நாட்களில் மோசமாக தெரியக்கூடிய வாய்ப்புள்ளது. 

நிறை குறைந்த பிள்ளைகள் பிறக்கிறது பாடசாலை மாணவர்கள் மந்தபோசனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

உணவு பணவீக்கம் 90 வீதமாக உள்ளது. உலகத்திலேயே உணவு பணவீக்கம் கூடிய நாடுகளிலும் 6 ஆவது இடத்தில் உள்ளது. 

இதற்கான காரணத்தை நாம் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியான கொள்கை வகுப்பாளர்கள் நிதானமான கொள்கை வகுப்பை மேற்கொள்ள வேண்டும். 

வவுனியாவில் விலங்குகளை மேய்ச்சலுக்கு விட மேய்ச்சல் தரை இல்லை. கடந்த 20 வருடங்களாக மாவட்ட செயலக கூட்டங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அரசாங்கம் நாட்டில் விவசாயம் தொடர்பான கொள்கை வகுப்பை மேற்கொள்ளும் போது அரசியலுக்காக இல்லாமல் மாவட்டங்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கவேண்டும்.

இன்னும் சில காலத்தில் உணவு பஞ்சத்தின் விளைவை சுகாதார குறிகாட்டிகளில்  அவதானிக்க கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply