சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய சொகுசுக்கப்பல் ஒன்று சனிக்கிழமை (03) மாலை கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்குள் ஏற்கெனவே இரண்டு சொகுசு பயணிகள் கப்பல்கள் இலங்கை வந்திருந்த நிலையில் மூன்றாவதாக அஸமாரா க்வெஸ்ட் (Azamara Quest) எனும் சொகுசுக்கப்பல் ஒன்று சனிக்கிழமை மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் சுமார் 600க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் 408 சிப்பந்திகளையும் கொண்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை இக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையவுள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு வரும் இரண்டாவது பயணிகள் சொகுசுக் கப்பல் இதுவாகும்.