டென்சின் லெக்ப்ஹெலுடன் ஜனாதிபதி நட்பு ரீதியிலான சந்திப்பு

பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல், நட்பு ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு, இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் 06ஆம் திகதி பிம்ஸ்டெக் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட லெக்ப்ஹெல்லின் இலங்கைக்கான முதலாவது விஜயம் இதுவாகும்.

2018 – 2020ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், பிம்ஸ்டெக்கின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்தது.

அக்காலத்தில் ஆரம்ப உறுப்பினராக இருந்துகொண்டு பிம்ஸ்டெக் அமைப்புக்காக இலங்கை வழங்கிய ஒத்துழைப்பை, பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் பாராட்டினார்.

இதன்போது ஜனாதிபதி பொதுச் செயலாளரிடம் தெரிவிக்கையில்,

பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாகக் கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும்.

அதேபோன்று, பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அதன் பிரதிபலன்கள் நேரடியாக வழங்கப்படக்கூடிய வகையில் அங்கத்துவ நாடுகளுடனும் பொதுச் செயலாளர் அலுவலகத்துடனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.

மேலும், பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அங்கத்துவ நாடுகளுக்கிடையில் முக்கியமான துறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவு என்பன, இலங்கைக்குரிய பிரதான பிரிவுகளாகும்.

அதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை எதிர்வரும் ஓரிரண்டு மாதங்களில் முன்வைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப் பரவல் நிலைமை காரணமாகக் குறித்த தினத்தில் நடத்துவதற்கு முடியாமல் போன ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டை, எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த முடியுமாகுமென்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, பிம்ஸ்டெக் செயலகத்தின் பணிப்பாளர்களான ஹூசைன் முஷாரஃப் , மஹிசினீ கொலொன்னே ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply