நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாடசாலை மற்றும் வைத்தியசாலை வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவதாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கிராமிய பாடசாலைகளுக்கான பிரவேச வீதிகள் மற்றும் கிராமிய வைத்தியசாலை பிரவேச வீதிகள் பற்றிய விபரங்களைத் துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதனை உடனடியாக தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரவேச வீதிகளை அடையாளம் காணுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்குங்கள்.
பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்யுமாறு கோரி பொதுமக்களிடம் இருந்து கடிதங்கள் கிடைத்து வருகின்றமையால் முன்னுரிமை அடிப்படையில் அந்த வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும்.
2022 புதுவருடத்தில் சவால்களை வெற்றி கொள்ளும் வருடமாகக் கருதி சவால்களை வெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அபிவிருத்திக்கு அதிகாரிகள் உதவ வேண்டும். தேவையான போது வேலை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளை மாத்திரம் குறை கூறுவதில் அர்த்தமில்லை.முதலில் கொள்கை ரீதியான முடிவு எடுத்து அதன் பின்னர் பணியாற்ற வேண்டும்.
அதனால் மக்கள் சார்பாக உங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும், எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க மட்டுமே செயல்படுகின்றன.மக்கள் நலமாக இருந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.
அதிகாரத்திற்கு வருவது பற்றிச் சிந்திப்பதற்கு முன்னர் கோவிட் நெருக்கடியைத் துரிதமாக முடிவு காண்பது எப்படி என்று பார்க்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பதால் பயனில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளுக்குத் திட்டம் இருந்தால் 24 மணி நேரத்தில் முன்வைக்குமாறு சவால் விட்டேன்.இதுவரை அந்த சவால் ஏற்கப்படவில்லை.
நாடென்ற ரீதியில் இந்த சவால்களை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன். 2022ல் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன. எதிர்க்கட்சிக்குக் கனவு காண உரிமை உண்டு. ஆனால் நனவாக்க முடியாத பகல் கனவுகளை எதிர்க்கட்சிகள் காண்கின்றன.
இன்னும் பல ஆண்டுகள் நாம் தான் ஆட்சியில் இருப்போம். அதிகாரத்திற்கு வரத் துடிப்பதை விடுத்துப் பொறுப்புள்ள எதிரணியாக இருந்தால் கோவிட் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.








