யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வருடாந்தம் இடம்பெறும் பட்டத்திருவிழாவை இம்முறை நடத்த வேண்டாம் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொங்கல் தினத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டத்திருவிழாவை, தேசிய நிகழ்வாக அங்கீகரித்து, அனுமதி வழங்குவது தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம், விழா ஏற்பாட்டு குழு கலந்துரையாடியுள்ளமை தொடர்பில், ஊடகவியாலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது எமது பாரம்பரிய நிகழ்வு. சுமார் 50 ஆயிரம் பேர் வரையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
ஆகவே, கொரோனா மற்றும் ஒமிக்ரான் நிலைமைகளை கருதில் கொண்டு இம்முறை இந்த நிகழ்வை நடத்தாமல் இருப்பது நல்லது.
இது தொடர்பில் உள்ளுராட்சி மன்றம் மற்றும் விழா ஏற்பாட்டு குழுவுடன் கலந்துரையடியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு சிங்கள நிகழ்வாக மாறிவிடும் என்றும், இதற்கு அரசின் தலையீடு இருக்க கூடாது என்றும் பலர் தமது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.