பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார்? முருத்தெட்டுவே தேரர்

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்பதை கண்டறிய வேண்டும் என நாராஹென்பிட்டிய அபயராம விகாரையின் விகாராதிபதியும் கொழும்பு பல்கலைக்கழக வேந்தருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாராஹென்பிட்டிய அபயராம விகாரைக்கு சென்று தேரரை சந்தித்து விட்டு வெளியேறிய பின்னர், ஆனந்த தேரர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பிரதமர் பதவி விலகி விட்டதாக நாட்டில் செய்தி பரவுகிறதே என கேட்டேன். அப்படி எதுவும் இருக்கின்றதா என நான் பிரதமரிடம் கேட்டேன்.

அது பற்றி பிரதமருக்கு தெரியவில்லை. பதவியில் இருந்து விலக எதிர்பார்க்கவும் இல்லை அதற்கான தேவையும் இல்லை என பிரதமர் கூறினார்.

அப்படியானால், பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார் என்ற உண்மையை நாம் கண்டறிய வேண்டும். யார் அழுத்தம் கொடுத்தாலும் அச்சுறுத்தினாலும் பிரதமர் பதவி விலக மாட்டார்.

அவர் பதவி விலகினால், எம்மிடம் கூறிய பின்னரே விலகுவார். பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்பார்க்கும் நபர்கள் இருப்பார்கள் என்றால், ஒழிந்து மறைத்து செயற்படாது, பதவி வகித்த போதும் விலகி விடுங்கள் என நேரடியாக கூறுங்கள்.

நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து விலக விடமாட்டார்கள். அவர் விலகவும் மாட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *