விக்கிரகங்கள் கடத்தல்; இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரகங்கள் காணாமற்போனமை தொடர்பான குற்றச்சாட்டில், இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குற்ச்சாட்டில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அந்த இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வலி.வடக்குப் பகுதியிலுள்ள பல கோவில்களில் பத்துக்கும் மேற்பட்ட பிள்ளையார் விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழைப் பொலிஸார், நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து மேற்கொண்ட விசாரணையில், அவரிடமிருந்து இரண்டு பிள்ளையார் விக்கிரகங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அந்தச் சந்தேகநபர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில், பிள்ளையார் விக்கிரகங்கள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்று விசாரணையில் அம்பலமான இராணுவ சிப்பாய் ஒருவரையே இராணுவ பொலிஸாரின் உதவியுடன் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர். அந்த இராணுவச் சிப்பாய் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *