
அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் கரையோர தாழ்நிலப் பிரதேசங்களும் நீரில் மூழ்கி வருகின்றன.
கல்முனை – நாவிதன்வெளியை இணைக்கும் பிரதான கிட்டங்கி பாலத்தில் தற்போது வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்தால் குறித்த பாலத்தின் வழியான பிரதான போக்குவரத்து முற்றாக தடைப்படலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய முகாம், சவளக்கடை, கொளணி, அன்னமலை மற்றும் சொறிக்கல்முனை போன்ற பிரதேச பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, நாவிதன்வெளி பிரதேச செயலகம், பிரதேசசபை, சுகாதார வைத்திய அலுவலகம் உட்பட அரச அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களும் குறித்த பாலம் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, நீலாவணை, காரைதீவு நிந்தவூர் போன்ற தாழ்நில பகுதிகள், வயல் நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன.

