வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ்

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில்  நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால் ,மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில்,வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம்,  இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார். வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும். இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று. பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *