
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 56 தமிழக மீனவர்களைவும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளிருந்து இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன், இலங்கை அரசின் தடுப்பில் உள்ள, தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாத 75 மீன்பிடிப் படகுகளையும் மீட்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கோரியுள்ளார்.
இதற்கான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.