பிரபாகரன் வீரச்சாவு அடைந்துவிட்டாரா அல்லது உயிருடன் தலைமறைவாக உள்ளாரா..??மர்மமுடிச்சு அவிழுமா..! SamugamMedia

பிரபாகரன் வீரச்சாவு அடைந்துவிட்டாரா – அல்லது உயிருடன் தலைமறைவாக உள்ளாரா..?? இதன் உண்மைத்தன்மை தொடர்பாக மீண்டும் 2023இல் பேசுபொருளாக மாறியுள்ளது.

மீண்டும் இந்த சர்ச்சை விவாதங்கள் மீண்டும் எழ ஆரம்பித்துள்ளமையின் பின்னணி என்ன…???  இதற்கு முன்னர் இவ்வாறான சர்ச்சையான விவாதங்கள் எத்தனை சந்தர்ப்பங்களில் மறுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார்.

இவரது கூற்றைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் இது தொடர்பிலான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தியாவின் உளவுப்பிரிவான ரோ தற்போது இது தொடர்பிலான விசாரணைகளை இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் ஆரம்பித்துள்ளனர்.

எனினும் இலங்கை இலங்கை இராணுவம் பிரபாகரன் உயிருடன் இல்லை என முற்றாக மறுத்துள்ளது.

ஆனால் கடந்த 2009 ஆண்டு மே மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த உடனேயும் அதனை மறுத்திருந்தனர்.

1)     2009ஆம் ஆண்டு மே மாதம் 21 திகதி

முதன் முறையாக கடந்த 2009 ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இலங்கை அரசாங்கத்தின் அறிப்பை தொடர்ந்து முதலாவதாக பழ.நெடுமாறன் அந்த அறிவிப்பை நிராகரித்திருந்தார்.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு மே மாதம் 21 திகதி முதலாவதாக பிரபாகரன் இறக்கவில்லை என்றும் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார்.

2)    2009ஆம் ஆண்டு மே மாதம் 22 திகதி

2009ஆம் ஆண்டு மே மாதம் 22 திகதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன்(கே.பி) , பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

எனினும் பின்னர் பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டதாக சர்வதேச ஊடகத்திடம் செல்வராசா பத்மநாபன் குறிப்பிட்டிருந்தார்.

3) 2009ஆம் ஆண்டு மே மாதம் 24 திகதி

2009ஆம் ஆண்டு மே மாதம் 24 திகதி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர் உயிருடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும் உலகத் தமிழர்களின் இதய நாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்.

அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார். தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார்’ என வைகோ 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி

 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 திகதி பிரபாகரனுடைய தந்தை வேலுப்பிள்ளை மரணமடைந்த போது தொல்.திருமாவளவன் அந்த இறுதிசடங்கில் இலங்கைக்கு வருகை தந்து இந்தியா திரும்பிய பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர்.

பிரபாகரனும் இருக்கிறார். பொட்டு அம்மானும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்த திருமாவளவன், கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய பேட்டி ஒன்றில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தான் நம்பவில்லை என்று திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி

இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்த விடயம் தொடர்பாக மீண்டும் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதேபோன்று பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்ச கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்தக் காலம் வெகுவிரைவில் வரும் என்று 2014ஆம் ஆண்டு வைகோ குறிப்பிட்டிருந்தார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி

கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பழ.நெடுமாறன் மீண்டும் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இப்போதுவரை, தொடர்ந்து அந்த நிலைப்பாட்டிலேயே அவர் இருந்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் யுத்தம் முடிவுக்கு வந்திருந்த தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் பிரபாகரன் மரணமடையவில்லை என்றும் அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல அந்தக் கருத்துகளை அவர்கள் மாற்றிக்கொண்டனர்.ஆனால், பழ. நெடுமாறன் மட்டுமே தொடர்ச்சியாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறி வருகின்ற நிலையில் தற்போதும் இந்த விடயம் மீண்டும் 2023இல் பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply