13வது திருத்தச்சட்டத்தை உருவாக்கும் போது மௌனம் காத்த தரப்பினர் தற்போது அதனை விமர்சித்தால் அது, சர்வதேச ரீதியிலான விரிசல்களுக்கும் வித்திடும் என்பதே வெளிப்படை என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அரசியல் சமூக, சமய, கலை, கலாசார விழுமியங்களோடு சுதந்திரமாக வாழவேண்டுமென்பதே எல்லோரதும் எதிர்ப்பார்பாகும்.
அந்தவகையில் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்கும் ஏற்றவகையிலானதாகவே அமைந்துள்ளது.
அரசியலமைப்பை மாற்றி, புறக்கணித்து அல்லது கொச்சைப்படுத்தி அதனூடாக நாட்டை குட்டிச்சுவராக்கும் எண்ணம் துளியளவும் கிடையாது என்பதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகத் தெளிவுபட கூறியுள்ளமை எமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதாகவுள்ளது.
13ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில் அதில் குற்றம் கண்டுபிடிப்பதோ அல்லது அது தேவையில்லை என்ற தொனியில் பேசுவதோ எந்த எகையிலும் பொருத்தமானதல்ல.
சட்டங்கள் வகுக்கப்படுவது நாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டேயொழிய தனிப்பட்டவர்களின் நலனுக்காகவோ அல்லது இனவாதம் பேசும் அரசியல் கட்சிகளின் நன்மைக்காகவோ இல்லை.
புதிய திருத்தச்சட்டங்கள் கொண்டுவரப்படும் போது மௌனியாக இருந்தவர்கள சுமார் 40 வருடங்களுக்கு பிறகு அதனை விமர்சனம் செய்வதோ அல்லது அதனை எமது அரசியலமைப்பில் இருந்து நீக்குவதற்கு எத்தனிப்பதோ பாரதூரமான சிக்கல்களுக்கும் சர்வதேச ரீதியிலான விரிசல்களுக்கும் வித்திடும் என்பதே வெளிப்படை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





