நாட்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தமாட்டோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு! SamugamMedia

“நாட்டு மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் பிழைப்பு நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை.”

 இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்குப் பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்ட சிலர்  நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிகின்றனர். சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கின்றாரே தவிர தனது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ அல்ல என்பதை அவர்களிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மக்களுக்காக எதுவும் செய்யாது தம்பட்டம் அடிப்பவர்கள் எதையுமே செய்ய நினைப்பதில்லை. அவர்கள் பொய்யான பாசாங்குளைப் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பஸ்களில் தங்கள் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஸ்டிக்கர்களாக ஒட்டி தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டாலும், 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பஸ்ஸையேனும் வழங்க அவர்களால் முடியவில்லை. ஆனாலும், பாடசாலை மாணவர்களுக்கு நான் பஸ் வழங்கும்போது, ‘பஸ் மேன்’ என்று என்னை அவர்கள் விமர்சிக்கின்றனர்.

எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது” – என்றார்.

Leave a Reply